உடுமலை: விதிமுறைகளை மீறி உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த "பிளக்ஸ்' பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அமைப்பினருக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். பல பேனர்கள் நேற்று அகற்றப்பட்டன. உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட நாளில் அகற்றப்படுவதில்லை. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், பலத்த காற்று காலங்களில் ரோட்டில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகிறது. பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் ரோடு சந்திப்பு உட்பட பல இடங்களிலும், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், கொமரலிங்கம் போன்ற பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற எஸ்.பி., அருண் உத்தரவிட்டார். உடுமலை போலீஸ் உட்கோட்டத்திலுள்ள உடுமலை, தளி, கொமரலிங்கம், குடிமங்கலம், மடத்துக்குளம் ஸ்டேஷன் கட்டுப்பாட்டு பகுதியில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணி நேற்று நடந்தது. சம்பந்தப்பட்ட அமைப்பினருக்கு பேனர்களை உடனடியாக அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். நேற்று நகரம் மற்றும் புறநகர் பகுதியில் பல பேனர்கள் அகற்றப்பட்டன. டி.எஸ்.பி., முருகானந்தம் கூறுகையில்," பேனர் வைக்கும் அமைப்பினர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். விழா நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பும், விழா முடிந்தததும் உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும் என அனுமதி பெறும் போது தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், பேனர்களை மர்மநபர்கள் கிழிப்பதால் பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே உட்கோட்ட பகுதியில் விதிமுறைகளை மீறிய பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன என்றார். "பேனர் அகற்றுவதில் பாரபட்சம்': உடுமலை போலீசார், "பிளக்ஸ்' பேனர்கள் அகற்றுவதில் பாரபட்சமாக செயல்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கொங்குநாடு முன்னேற்ற கழகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் கூறுகையில், பிற கட்சிகளின் பேனர்கள் கிழித்து தொங்கும் வரை அகற்றப்படுவதில்லை. போலீசாரும் ஆபத்தான இவ்வகை பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. நேற்று கொங்குநாடு முன்னேற்ற கழக பேனர்களை மட்டும் விழா முடிந்து ஒரு நாள் அவகாசம் கூட தராமல் அகற்றியுள்ளனர். பிற கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் உடுமலை நகரம் மற்றும் பிற பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்கள் பல அகற்றப்படாமல் உள்ளன. நிர்வாகிகள் தரப்பில் சில மணி நேரம் அவகாசம் கேட்டும் போலீசார் கண்டுகொள்ளாமல் பேனர்களை கிழித்து அகற்றியுள்ளனர். உடுமலை உட்கோட்ட போலீசாரின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

0 comments: (+add yours?)
Post a Comment