make gif

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார ஓடைகளில் மணல் கொள்ளை: பாழாகும் விளைநிலங்கள்

உடுமலை:மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஓடைகளில் தேங்கும் மணல் தொடர்ந்து திருடப்படுவதால், நீர் வழித்தடங்கள் காணாமல் போய் வருகின்றன. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் மழைக்காலங்களில் வெள்ளநீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுகிறது. மேற்குதொடர்ச்சிமலையில் உடுமலை வனசரகத்திற்குட்பட்ட திருமூர்த்திமலை பகுதியிலிருந்து ஜல்லிபட்டி கொங்குரார்குட்டை பகுதி வரை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஓடைகள் உள்ளன. மழைக்காலங்களில் மலையிலிருந்து சமவெளிப்பகுதிக்கு வழிந்தோடும் தண்ணீர் இந்த ஓடைகளின் வழியாக செல்கிறது. பருவமழைக்காலங்களில் இந்த ஓடைகளில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பல அடி உயரத்திற்கு மணல் பரப்பு உருவானது. மழை இல்லாத காலங்களிலும் ஓடைகளிலுள்ள மணல் பரப்பால் சுற்றுப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் மட்டத்திற்கு உதவியாக இருந்தது. இந்நிலையில், ஓடைகளில் மணல் பரப்பு அதிகம் தேங்கியதும், மணல் கடத்தல்காரர்களின் பார்வை மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தின் பக்கம் திரும்பியது. ஜல்லிபட்டி கொங்குரார் குட்டை பகுதியிலுள்ள ஓடைகளில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு அதிகரித்துள்ளது. கன்னிமார் ஓடை உட்பட பெயரிடப்படாத பல சிறிய ஓடைகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லோடு மணல் மாட்டு வண்டிகளின் மூலம் கடத்தப்படுகிறது.

இந்த கடத்தல்காரர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியாமல் மணலை கடத்த நூதன வழிகளை பின்பற்றுகின்றனர். ஓடையில் மணல் எடுக்க தனித்தனியாக இடத்தை பிரித்து வைத்து கொண்டு அதிகாலை 4.00 மணிக்கு மேல் சம்பவ இடத்திற்கு செல்கின்றனர்.  மாட்டு வண்டி முழுவதும் ஒரு மணி நேரத்தில் மணலை நிரப்பி, காலை 6.00 மணிக்குள் கொங்குரார் குட்டை, கோவிந்தாபுரம், சின்னகுமாரபாளையம் உட்பட மக்கள் குடியிருப்பு பகுதியை கடந்து சென்று விடுகின்றனர். பின்னர், மணலை ஓரிடத்தில் குவித்து வைத்து லோடு 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். அரசு வீட்டு வசதி திட்ட வீடுகள் அதிகளவு கட்டப்பட்டு வருவதால் தற்போது மணலுக்கு கிராக்கி நிலவுகிறது. இதனால், ஓடை மணலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு; கடத்தல்காரர்கள் கூடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கையாக அமைந்த நீர்வழித்தடங்களில் மணலை திருடி செல்வதால், மழைக்காலங்களில் மேற்குதொடர்ச்சி மலையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஓடைகளிலிருந்து திசைமாறி விளைநிலங்களுக்குள் செல்கிறது. இதனால், மணற்பாங்கான மண் அமைந்துள்ள விளைநிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடைகளில் மணல் அள்ள விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. வருவாய்துறை அதிகாரிகளிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.  சிறிது காலம் தடைபட்டிருந்த மணல் கடத்தல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உள்ளூர் வருவாய்துறை அதிகாரிகள் ஆசியை பெற்று விட்டு கடத்தல்காரர்கள் பணியை தொடர்வதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்து வருகின்றனர். தொடரும் மணல் திருட்டால் ஓடைகள் காணாமல் போயுள்ளதால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் அதிகாலை நேரங்களில் திடீர் ரெய்டு நடத்தி மணல் கடத்தும் வண்டிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அழிந்து வரும் ஓடைகளை காப்பற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket