உடுமலை: வன உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ள திருமூர்த்தி அணை மற்றும் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும், அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீராகவும், உடுமலை பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திருமூர்த்தி அணை உள்ளது. இயற்கை எழில் மிகுந்த இடத்தில், சினிமா படக்குழுவினர் அடிக்கடி "ஷூட்டிங்' நடத்துகின்றனர். இதற்காக செயற்கை செட்டிங் அமைக்கின்றனர். இதனால், அப்பகுதியில் நீராதாரம் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. திருமூர்த்தி அணையில் ஜன., 24ம் தேதி முதல்வர் கருணாநிதி கதை-வசனத்தில் எடுக்கப்படும், "பொன்னர்-சங்கர்' படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இதற்காக விதிமுறைகளை மீறி, வன எல்லையிலும், அணையின் நீர்தேக்கத்திற்கு அருகிலும் செட்டிங் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் படம் என்பதால், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. இயற்கையை அழிக்கும் சினிமா படக்குழுவினருக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படப்பிடிப்பு குழுவினரால், தாக்கி இறந்த விலங்குகளின் உடல்கள் அணையில் வீசப்பட்டதால் தண்ணீரும் மாசடைந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தெரிந்ததும் இயற்கை ஆர்வலர்கள் ஆவேசமடைந்துள்ளனர். விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வனம் பாதுகாக்கப்பட வேண்டும்: பசுமை மாறா இயற்கை பாதுகாப்புக்கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன்: திருமூர்த்தி அணையில்,படப்பிடிப்பு நடக்கும் இடம் வனப்பகுதியையொட்டிள்ளது. இப்பகுதியில், "100 டெசிபல்'க்கும் அதிகமாக சப்தம் எழுப்பினால், மரங்களில் கூடு வைத்து முட்டையிட காத்திருக்கும் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். முட்டைகளில் கரு அடை காக்கப்படாமல் அழியும். காலை மற்றும் மாலை நேரங்களில், வன எல்லையிலிருந்து தண்ணீர் குடிக்க அணைப்பகுதிக்கு வரும் வன உயிரினங்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. தடை செய்யப்பட்ட பகுதியாக இதுநாள் வரையிருந்த அப்பகுதியில், வெளியாட்கள் செல்லாமலும் இருந்தனர். இது ஒரு தவறான முன்னுதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்ல தூண்டு கோலாக மாறிவிடும். படப்பிடிப்புக்கு உயிர்ச்சூழல் நிறைந்த பகுதிகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.அ.தி.மு.க., போராட்டம் நடத்த திட்டம் : அ.தி.மு.க., மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை: முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களின் சுயநலத்திற்காக நடத்தும் படப்பிடிப்புகளால் கோவை பகுதியில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் இயற்கை வளம் அழிகிறது. கோவை நண்டங்கரை தடுப்பணையில் "ஏழாவது அறிவு' படத்திற்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட "செட்' காரணமாக தண்ணீர் மாசடைந்தது. தற்போது, இரண்டு மாவட்ட விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக உள்ள உடுமலை திருமூர்த்தி அணை முதல்வரின் வசனத்தில் உருவாகும் படத்திற்காக பாழ்படுத்தப்படுகிறது.புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகளை பாதுகாக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. விதிமுறை மீறல்களை அனைத்து துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். வனவிலங்குகளின் வாழ்க்கை முறை பாதிக்கப்படாமல் இருக்க பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைவாழ் மக்களை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், முதல்வர் படத்தின் படப்பிடிப்பிற்காக அணையில் தேங்கியுள்ள தண்ணீர் முழுவதும் மாசடைந்து மர்மமான முறையில் வனவிலங்குகள் இறந்துள்ளன. இதற்கு அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயற்கை வளங்களை சீரழிக்கும் முதல்வரை கண்டித்து, கட்சி தலைமையிடம் அனுமதி பெற்று விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில செய்தி தொடர்பாளர் ரமணன்: திருமூர்த்தி மலையில், வன உயிரினங்கள் மற்றும் உடுமலை பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக திருமூர்த்தி அணை உள்ளது. எனவே, இப்பகுதியில் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்து அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம். என இந்து மக்கள் கட்சி (தமிழகம்) செய்தி தொடர்பாளர் ரமணன் கூறியுள்ளார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி: திருமூர்த்தி அணை பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் பயன்படுகிறது. வன விலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அணைப்பகுதியில் சினிமா படப்பிடிப்பு அடிக்க நடந்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. நீர் மாசுபடுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுஅடைகிறது.
Download As PDFPrint this post

0 comments: (+add yours?)
Post a Comment